India

UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட NewsClick ஊடக ஆசிரியர்... உடனே விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இணைய ஊடகமான NewsClick நிறுவனம், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. பாஜக அரசின் ஊழல்கள், என பலவற்றையும் தங்கள் இணையதளத்தில் செய்தியாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வந்தது. இப்படி தொடர்ந்து பா.ஜ.க அரசின் முகத்தை கிழித்தெறிந்து வந்ததால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவியது.

கடந்த 2021ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாக NewsClick அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால் ஆதாரம் இல்லாததால், உச்சநீதிமன்றம், NewsClick மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இருப்பினும் அஞ்சாமல் தொடர்ந்து தங்கள் பணிகளை நேர்மையாக செய்து வந்த இந்த ஊடகத்துக்கு எதிராக பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு NewsClick பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் NewsClick இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 3-ம் தேதி NewsClick இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்தது. அதோடு சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து, பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட உடமைகளையும் பறிமுதல் செய்தது.

இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், NewsClick நிறுவனம் மீதும், நிறுவனர்கள் மீதும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. UAPA சட்டத்தின் கீழ், ஊடகத்தின் எடிட்டர் பிரபிர் புர்கயாஸ்தா, HR தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மீது, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்புடன் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சீனா மேற்கொண்டு வரும் பொய் பரப்புரை என்ற பெயரில் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டன.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பத்திரிகையாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், NewsClick ஊடகத்தின் எடிட்டர் பிரபிர் புர்கயாஸ்தா மீது பதியப்பட்ட வழக்கு செல்லாது என்று அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி ஆர் கவாய், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய ஆதாரங்கள் இன்றி ஊடகவியலாளர் பிரபிர் புர்கயாஸ்தா கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஆதாரங்கள் இன்றி அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பலரும் பாராட்டி வரவேற்று வருகின்றனர்.

Also Read: “ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோயிலை கட்டுவோம்...” - அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ச்சை பேச்சு!