India

பாஜகவுக்கு வாக்களிக்காத தலித் இளைஞர் மீது கொடூர தாக்குதல் : உ.பி-யில் யோகி போலிஸ் காட்டுத் தர்பார்!

உத்தர பிரதேச மாநிலம் பரேலி தொகுதிக்கு உட்பட்ட பஹோரங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர் வீரேந்தர் குமார். இவர் கிராமத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் இலவச ரேஷன் வாங்க வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த வீர் பகதூர், ராம்பல் ஆகிய இருவர் வீரேந்திர குமாரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் "இலவச ரேஷன் மட்டும் வாங்குவீர்கள். ஆனால் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டீர்களா?" என கேள்வி எழுப்பி, ஆபாசமாக வசைபாடி தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலரும் தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலிஸாருக்கும், யோகி அரசுக்கும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு உரிமை உள்ளதால் அவர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகத்திற்காகச் செலவிடப்படும் பணம் பொதுமக்களுடையது. தலித் இளைஞர் மீது இவ்வளவு கொடூரமாகத் தாக்குதல் நடத்த, இந்த காவல்துறையினருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?" என கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பரேலி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சத்ர பால் சிங் போட்டியிடுகிறார். அதேபோல் சமாஜ்வாதி கட்சி சார்பில் பிரவீன் சிங் ஆரோன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”மளமளவென சரிந்து வரும் பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்பு” : முன்னாள் முதல்வர் அகிலேஷ் பேச்சு!