India

தடுப்பூசி விவகாரம் - சொந்தநாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்த பா.ஜ.க : அகிலேஷ் குற்றச்சாட்டு!

உலகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று தான் கொரோனா. இந்த பெருந்தொற்றின் காரணமாக நாள்தோறும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது. தினமும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோய் தொற்று பரவ கூடாது என்பதால் அந்தந்த நாட்டு அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால் லாக் டவுன் போடப்பட்டு மக்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மாஸ்க் அணிவது, சுத்தமாக இருப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டறிந்து, அதனை மக்கள் செலுத்திய பின்னரே, கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்தது. எனினும் சிலர் உயிரிழந்தே வந்தனர்.

ஸ்புட்னிக், கோவிஷீல்ட், கோவாக்சின் என பலவகையாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்கள் உயிர் காப்பாற்றப்பட்டது.தற்போது கொரோனா அலை ஓய்ந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேற தொடங்கியது

பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca) கோவிட் மருந்து இரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தும். அதோடு இவை இரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கையையும் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலகம் முழுவதுமுள்ள தங்கள் மருந்துகளை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், கட்சி நன்கொடைக்காக பா.ஜ.க அரசு, கோடிக்கணக்கான உயிர்களை ஆபத்தில் சிக்கவைத்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனமானது அதிகப்படியாக வினியோகத்தை காரணம் காட்டி அந்த தடுப்பூசியை திரும்ப பெற்றுள்ளது. இந்த ஆபத்தான தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் உடலில் இருந்து எப்படி திரும்ப எடுப்பது. கட்சிக்கு கோடிக்கணக்கான நன்கொடை பெறுவதற்காக, கோடிக்கணக்கான உயிர்களை மோடி அரசு ஆபத்தில் சிக்க வைத்துள்ளது. பாஜக தனது சொந்தநாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்து மக்கள் விரோத கட்சியாக மாறிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

Also Read: தொடரும் மோசடி - ”நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” : தி.மு.க MP பி.வில்சன் வலியுறுத்தல்!