India

”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நாளை மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்பி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி எம்.பி, " இடஒதுக்கீட்டை அகற்ற விரும்புவதாலும், அரசியலமைப்பை மாற்ற நினைப்பதாலும் பா.ஜ.க 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மக்களுக்கு தேவையான இடஒதுக்கீட்டை வழங்குவோம். அரசியல் சாசனம், மக்களின் உரிமைகள், இடஒதுக்கீடு ஆகியவற்றை காப்பாற்றுவதற்காகவே இந்த தேர்தலில் நாங்கள் போராடுகிறோம்.

ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என நாட்டிலுள்ள மக்களுக்கு என்னென்ன உரிமைகள் கிடைத்திருந்தாலும், அது அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பை வழங்குவோம் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றத் தவறிவிட்டார். இதன் விளைவாக நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை மறைமுகமாக விமர்சித்து கூறியது என்ன ?