India

”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சனைகளை புறக்கணித்துவிட்டு மதப் பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை பா.ஜ.க திசை திருப்பப் பார்க்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கரோபாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, " அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பா.ஜ.கவின் நோக்கம் மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதைப் பிரதமர் மறுத்தாலும் பா.ஜ.க தலைவர்களின் பேச்சுகள் உண்மையை வெளிப்படுத்தி விடுகிறது.

மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களது திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். சாமானிய மக்கள் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம் கூட கவலை இல்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி தனது நண்பர்களுக்கு ஒப்படைத்து வருகிறார் மோடி.

எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள் என்று மோடியிடம் கேட்டால் அவரிடம் பதில் இல்லை. 45 வருடங்கள் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அரசுத்துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை பிரதமர் மோடி நிரப்பவில்லை.

தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் பா.ஜ.க மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. நிறுவனங்கள் பா.ஜ.கவுக்கு நன்கொடை அளிப்பதற்காக விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!