India

நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரத்தின் சோதனை தோல்வியை தழுவினாலும் அதன் மற்றொரு கருவு வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த கருவியில் நிலவில் இருந்த உறைபனியின் அளவைக் கணக்கிட உதவும் Dual-frequency Synthetic Aperture Radar என்ற கருவி பொருத்தப்பட்டிருந்தது. அந்த கருவி மூலம் நிலவின் துருவங்களில் உறைபனி இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிலவுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் இருந்த கருவிகள் மூலம் கிடைத்த தகவலையும், சந்திரயான் மூலம் கிடைத்த தகவல்களையும் வைத்து நிலவின் துருவங்களில் இருக்கும் பள்ளங்களில் நீர் இருப்பதற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், நிலவின் துருவங்களில் இருக்கும் பள்ளங்களில், மேற்பரப்பில் இருப்பதைவிட இரண்டு மீட்டர்கள் வரை தோண்டினால் இருக்கும் உறைபனி ஐந்து முதல் எட்டு மடங்கு அதிகம் என்றும் நிலவின் தென்துருவத்தில் இருப்பதைவிட வட துருவத்தில் இரண்டு மடங்கு உறைபனி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோவுடன், ஐ.ஐ.டி கான்பூர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம், மற்றும் ஐ.ஐ.டி தன்பாத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது எதிர்காலத்தில் நிலவில் மனிதன் நீண்ட நாள் தங்கியிருக்க கூடிய சாத்தியங்களை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read: உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?