India

”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 3 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி 94 மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தோல்வி பயத்திலேயே மோடி இப்படி பேசி வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய மோடி, பா.ஜ.க இருக்கும் வரை இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும், நரேந்திர மோடி உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற விளையாட்டை விட மாட்டேன். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டேன் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பிரதமரின் இடஒதுக்கீடு பேச்சுக்கு காங்கிரஸ் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதில், “மூங்கில் இல்லை என்றால், புல்லாங்குழல் இசைக்காது” என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், அரசு வேலையை ஒழித்துவிட்டால் இடஒதுக்கீடு இருக்காது என்ற நோக்கில் மோடி செயல்படுகிறார்.

கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மூலம் அரசு வேலைகளை இல்லாதொழித்து தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரகசியமாகப் பறித்து வருகிறது.

2013ல் பொதுத்துறையில் 14 லட்சம் நிரந்தரப் பணியிடங்கள் இருந்த நிலையில், 2023ல் வெறும் 8.4 லட்சம் மட்டுமே இருக்கிறது. BSNL, SAIL, BHEL உள்ளிட்ட நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், 6 லட்சம் நிரந்தர வேலைகள் அகற்றப்பட்டன. இதில் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!