India

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர் பிரிஜ்வல் ரேவண்ணா. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கூட.

இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும், பா.ஜ.கவும் இணைந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறார்கள். இங்கு ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை தன்னை பிரிஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பிரிஜ்வல் ரேவண்ணா மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறப்பாரா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடித் தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களைக் கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!