India

சோதனையில் சிக்கிய ரூ. 2 கோடி : காரில் பணத்தை எடுத்து வந்த பா.ஜ.க பிரமுகரிடம் விசாரணை!

கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக ஏப்.26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் மாநில முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு பின்னிபேட்டை சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இரண்டு பெரிய பைகளில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் இந்த பணம் குறித்து விசாரித்தபோது,வங்கியிலிருந்து பணத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினர். ரூ.2 கோடி இருந்ததால் உரிய ஆவணங்களைக் காட்டும்படி கூறி தேர்தல் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரித்தபோது அதில் வெங்கடேஷ் பிரசாத் என்பவர் பா.ஜ.க கட்சியின் பிரமுகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 கோடி பணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Also Read: மன்னிப்பு கேட்டு பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம் : என்ன காரணம்?