India

மோடியின் 10 ஆண்டு காலத்தில் அதிகரித்த வாராக்கடன்: ரூ.14.56 லட்சம் கோடியை கண்டுக்கொள்ளாத ஒன்றிய பாஜக அரசு!

மோடி அரசின் 9 ஆண்டுகளில் ரூ.25 கோடிக்கு வாராக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் வெறும் ரூ.2.5 கோடிதான் வசூல் ஆகி இருக்கிறது என முன்னதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புள்ளி விவரத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மோடியின் 10 ஆண்டு காலத்தில் வங்கிகளின் வாராக் கடன் தொகை ரூ.14.56 லட்சம் கோடி என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொகை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பட்ஜெட்டைவிட 2.5 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2022-23ம் ஆண்டு மட்டும் தள்ளுபடி செய்யப்பட கடன் தொகை ரூ.2.12 லட்சம் கோடி ஆகும். இதே ஆண்டில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது 80,000 கோடி. இதனால், ஸ்டேட் வங்கி மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழந்துள்ளது. அதாவது, கொடுக்கப்பட்ட கடன் ஒவ்வொரு ரூ.100 ரூபாய்க்கும் வெறும் 14 ரூபாய் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.

வங்கிகளை ஏமாற்றி சூறையாடிய சில கனவான்கள்!

இதற்கிடையில் விஜய் மல்லையா 10,000 கோடி ஏமாற்றினார். 2016லிருந்து லண்டனில் வாழ்கிறார். பிரிட்டனுடன் மோடி அரசுக்கு “சூப்பர்” உறவு இருந்தும் இவரை இந்தியா கொண்டுவர இயலவில்லை.

நீரவ் மோடி/மெகுல் சோக்சி ஆகியோர் 11,400 கோடி ஏமாற்றினர். அவர்களும் வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

ஜதின் மேத்தா 7,000 கோடியை ஏமாற்றிவிட்டு 2014ல் வெளிநாடு பறந்துவிட்டார். இவரை புலனாய்வு அமைப்புகள் நெருங்க முடியவில்லை. இவர் அதானிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

விக்ரம் கோத்தாரி 2,919 கோடியை ஏமாற்றினார். 2018ல் கைது செய்யபட்டார். பிணையில் வந்தார். உயிரிழந்தார். அந்த தொகை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

வீடியோகான் 3,250 கோடியை ஏமாற்றியது. இதில் ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரி சந்தா கோச்சார் கூட்டுக் களவாணி என கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் கைது செய்யப்படும்வரை பிரதமர் வெளி நாடு செல்லும் பொழுதுவங்கி அதிகாரிகள் பட்டியலில் அவரும் பங்கேற்றார்.

ஏர்செல் நிறுவனம் நடத்திய சிவசங்கரன் ரூ.600 கோடி ஏமாற்றினார். சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டுள்ளார்.

குஜாத்தை சேர்ந்த பயொ-ஸ்டெர்லிங் 2017ல் 8,100 கோடி ரூபாய் ஏமாற்றியது. இதுவரை 1 ரூபாய் கூட திரும்ப பெற்றதாக தெரியவில்லை.

ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்தை சேர்ந்த ரிஷி கமலேஷ் 2019ல் 22,842 கோடி வங்கிப்பணத்தை ஏமாற்றினார். இதுவரை எவ்வளவு வசூல் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

இப்படி மோடி ஆட்சியில் வங்கிகளை ஏமாற்றியவர்கள் பட்டியல் மிக நீளமானது. பாஜகவை தோற்கடிப்போம்! வங்கிகளை காப்போம்!!

- அ. அன்வர் உசேன்.

நன்றி : தீக்கதிர்.

Also Read: பஞ்சாப் மாநில பாஜக வேட்பாளரை துரத்தியடிந்த விவசாயிகள் : கிராமங்களில் நுழைய விடாமல் பாஜகவுக்கு எதிர்ப்பு !