India

பொதுமக்களின் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு : சுங்கச்சாவடி கட்டண உயர்வை நிறுத்திவைப்பதாக அறிவிப்பு !

இந்தியாவில் சாலைகள் 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பின்னர், அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

ஆனாலும் ,ஒன்றிய அரசு சுங்க கட்டண தொகையை அதிகரித்தவண்ணம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சுங்க கட்டணங்களை நேரடியாகப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துத் துறைக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்த வருவாய் போதவில்லை என ஒன்றிய பாஜக அரசு மேலும் மேலும் சுங்கக்கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 7 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியான நிலையில், ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேர்தல் வரும் நேரத்தில் சுங்கச்சாவடி கட்டான உயர்வு பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கட்டணம் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

Also Read: 42 வயதிலும் ருத்ரதாண்டவம் ஆடிய தோனி : சென்னை அணி தோற்றாலும் கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள் !