India

”பா.ஜ.க அரசின் கையாலாகாத தனம் இதுதான்” : ப .சிதம்பரம் விமர்சனம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இளைஞர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதியில் 10%ம் கூட நிறைவேற்றவில்லை.

வீதிக்கு வீதி வேலை இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்களைப் பற்றி ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வேலையின்மை பிரச்சனையை அரசால் தீர்க்க முடியாது என ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் கூறியுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியின் வேலை வாய்ப்பு குறித்த பொய் பேச்சுகள் அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய இந்தியா வேலைவாய்ப்பு 2024 ஆய்வு அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஆனந்த் நாகேஸ்வரன், "வேலைவாய்ப்பு பிரச்சனையில் ஒன்றிய அரசால் மட்டுமே முழுமையாகச் சரி செய்ய முடியாது. கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. மேலும் பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து வருகிறது" என பேசியுள்ளார்.

இந்நிலையில் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், பா.ஜ.க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பா.ஜ.க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

Also Read: ”வேலையின்மை பிரச்சனையை பா.ஜ.க அரசால் தீர்க்க முடியாது” : ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் பேச்சு!