India

மாறுவேடமிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண்.. அதிரடியாக நடத்திய சோதனையில் சிக்கிய ஆதாரங்கள் - நடந்தது?

பாஜக ஆளும் வட மாநிலங்களில் அரசு சார்ந்த எந்த துறையும் சரியாக செயல்படவில்லை என்று பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் மாட்டுக்கு கொடுக்கும் முன்னுரிமை கூட மனிதனுக்கு கொடுப்பதில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இங்கு செயல்படும் அரசு மருத்துவமனை ஒன்றில், காலாவதியான மருத்துவத்தை பயன்படுத்தியதை IAS அதிகாரி ஒருவர் கண்டறிந்துள்ளார்.

உத்தர பிரதசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கிருக்கும் ஃபிரோசாபாத் பகுதியில் திடா மாய் (Dida Mai) என்ற சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரை காண வந்துள்ளார்.

தலையில் முக்காடு அணிந்திருந்த அந்த பெண், வரிசையில் நின்று ரூ.10 கொடுத்து டோக்கன் பெற்றுக்கொண்டு காத்திருந்தார். அப்போது அந்த சுகாதார மையம் சுகாதாரமின்றி, குப்பையாக, அசுத்தமாக இருந்துள்ளதை கண்டுள்ளார். மேலும் செவிலியர்கள் நோயாளிகளை அவமரியாதையாக நடத்துவதையும் பார்த்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவரிடம் கேட்டபோது, அவர் இந்த பெண்ணிடம் பொறுப்பின்றி பேசியதோடு, அவமரியாதையாகவும் பேசியுள்ளார். இதையடுத்தே தான் யார் என்பதை முக்காட்டை விலக்கி வெளிப்படுத்தியுள்ளார் அந்த பெண். அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருத்தி ராஜ் (Kriti Raj) ஆவார். இவரை கண்டு உடனே அங்கிருந்தவர்கள் பதறவே உடனே வெளியில் காத்திருந்த போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகளை உள்ளே அழைத்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பல காலாவதியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வளைந்திருந்த ஊசிகள், கெட்டுப்போன மருந்துகள், சுத்தமில்லாமல் இருந்த மருத்துவ உபகரணங்கள் என பலவையும் சேகரித்தனர். தொடர்ந்து வருகைப்பதிவேட்டை சோதனை செய்கையில், அதில் சில மருத்துவர்கள் நீண்ட நாட்கள் வராமல் இருந்தது, பலர் கையெழுத்திட்டு பணிக்கு வராமல் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்தி ராஜ் கூறுகையில், “இந்த சுகாதார மையத்தில் பல மோசமான நிகழ்வுகள் நடப்பதாக அடுக்கடுக்காக தொடர் புகார்கள் வந்தது. எனவே நான் விசாரணை மேற்கொள்ள எண்ணி, நோயாளி போல் வந்தேன். ஆனால் இங்கே இருக்கும் சுற்றுச்சூழல் உள்ளிட்டவையை கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.

மேலும் நாய்கடிக்கு வந்தவருக்கு சிகிச்சை பெற காலை 10 மணிக்கு வந்தவர் நீண்ட நேரம் காத்திருந்தும் மருத்துவர் வராததும் தெரியவந்தது. காலாவதியான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதார மையம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டது” என்றார். இதையடுத்து இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முக்காடு அணிந்துகொண்டு மருத்துவமனையில் தைரியமாக சென்று நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருத்தி ராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: ரூ.6060 கோடி நன்கொடை : பா.ஜ.கவுக்கு அள்ளி கொடுத்த நிறுவனங்களின் பட்டியல் இதோ!