India

Mouth Freshener பயன்படுத்திய 5 பேர் இரத்த வாந்தி... ஹோட்டலில் நடந்த விபரீதத்தின் பின்னணி என்ன ?

உத்தர பிரதேசம் - டெல்லிக்கு இடையில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியின் செக்டார் 90-ல் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உணவருந்திவிட்டு செல்வர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (02.03.2024) இரவு நேரத்தில் இங்கு சிலர் உணவருந்தியுள்ள்னர்.

சாப்பிட்டு முடித்த பின் அவர்களுக்கு அங்கிருந்த ஊழியர் mouth freshener என்று சொல்லப்படும் வாய் கிருமிகளை அகற்றும் திரவம் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் தங்கள் வாயில் ஊற்றியுள்ளனர். வாயில் ஊற்றிய அடுத்த நொடியே அவர்கள் நாக்கு எரிந்து அரித்துள்ளது. பிறகு வாயில் இருந்து இரத்தமாக கசிந்துள்ளது.

இதனால் பயந்துபோன அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். அவர்களுக்கு அங்கிருந்த சக ஊழியர்கள் தண்ணீரை கொண்டு வரவே, அவர்கள் அதனையும் வாயில் ஊற்றி கொப்பளித்துள்ளனர். எனினும் இரத்தம் வடிவதும், எரிச்சலும் சரியாகவில்லை என்பதால் இதுகுறித்து உடனே போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த mouth freshener-ஐயும் கையோடு எடுத்து சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அப்போது அதனை கண்ட மருத்துவர், இது Ice எனப்படும் ஒருவகையான அமிலம் என்று கூறினார். மேலும் இது உயிருக்கே ஆபத்து விளைவிக்கூடியவை என்றும் அதிர்ச்சி தகவலை எடுத்துரைத்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. Mouth Freshener பயன்படுத்தியதால் 5 பேர் இரத்த வாந்தி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சக கலைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் : போதைமருந்து கொடுத்து நடந்த கொடூரம் !