India

மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை : தற்கொலை செய்துகொண்ட சிறுமிகள்... உ.பி-யில் கொடூரம் !

உத்தர பிரதேச மாநிலத்தின் கதம்பூர் அருகே உள்ள பராவ்லியில் (Barauli) என்ற பகுதியில் செங்கற்சூளை ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே 14 மற்றும் 16 வயதில் 2 சிறுமிகள் தங்கள் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த பிப் 28-ம் தேதி இருவரும் வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் தேடி அழைத்துள்ளனர்.

அப்போது செங்கற்சூளை அருகே இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இருவரும் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ந்து போன பெற்றோர், உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சிறுமிகளின் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகளை வலுக்கட்டயமாக மது குடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணம் உள்ளூர் கான்ட்ராக்டர், அவரது மகன், மற்றும் மருமகன் என்றும் தெரிவித்தனர்.

அதோடு சிறுமிகளை பாலியல் வன்கொடுமையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகவும் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கான்ட்ராக்டர் ராம்ரூப் நிஷாத் (48), மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சிறையில் அடைத்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: “பதவிக்காக எந்தளவுக்குத் தரைக்கு இறங்கிவிட்டார்...” - பிரதமரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு MP கண்டனம் !