India

தடுப்புச் சுவர் மீது மோதி நொறுங்கிய கார் : உயிரிழந்த MLA - தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா மாநிலம் கண்டோன்மென்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதா. பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியைச் சேர்ந்த இவர் பாசராவிலிருந்து ஹைதராபாத்துக்கு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது படன்சேரு அருகே சென்றபோது சாலையிலிருந்த தடுப்பு சுவர் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லாஸ்யா நந்திதா MLA உயிரிழந்தார். மேலும் கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகிய இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் BRS தலைவர் கே. சந்திரசேகர் ராவ், மூத்த தலைவர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட பலர் மறைந்த லாஸ்யா நந்திதாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த BRS கட்சி தலைவர் ஜி. சயன்னாவின் மகள்தான் லாஸ்யா நந்திதா ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை இதே தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ்நாட்டில் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்குத் தடை : ஏன்? என்ன காரணம்?