India

தலித் மற்றும் பழங்குடியினர்களை தட்டிக்கழிக்கும் குஜராத் அரசு: இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்படாத வழக்குகள்!

“SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி, தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாஜக அதனை செய்ய தவறுகிறது,” - ஹிதேந்திர பித்ததியா.

குஜராத் மாநிலத்தில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதன் கேள்வி நேரத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (ச.உ) ஜிக்னேஷ் மேவானி,“தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள்” குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சமூக நீதி அமைச்சகம், SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தெரிவித்தது. மேலும், சில தரவுகளையும் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸின் தலித் பிரிவுத் தலைவர், ஹிதேந்திர பித்ததியா, “இந்தியாவிலேயே குஜராத்தில் தான் SC,ST பிரிவினர்களுக்கு எதிராக அதிகப்படியான குற்றங்கள் நிகழ்கின்றன.

தேசிய குற்றப்பிரிவு பதிவகம் (NCRB)வெளியிட்ட அறிக்கையின் படி, குஜராத்தில் ஒவ்வொரு நாளும் SC,ST பிரிவினர்களுக்கு எதிராக சுமார் 4 குற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க தட்டிக்கழித்து வருகிறது ” என குற்றஞ்சாட்டினார்.

மேலும், “SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி, முதல்வர் தலைமையில், தலைமை காவல் ஆணையர் உள்ளிட்டவர்கள் அமைந்த குழு, சிறுபான்மையினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதிலும் மந்த நிலையே நீடித்து வருகிறது,” என்றார்.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் தரவுகள் (DATA) படி, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், குற்ற விசாரணைகளில் காலம் தாழ்த்தி வரும் பா.ஜ.க, அநீதி இழைத்து வருகிறது என எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Also Read: சிறையிலேயே கர்ப்பமாகும் பெண் கைதிகள்... பிறந்த 196 குழந்தைகள்... - கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு !