India

'ரூ.100 வரிக்கு வெறும் ரூ.12 நிதி' : ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் கர்நாடக அரசு போராட்டம்!

இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரம் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணத்திற்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அநீதியைக் கண்டித்து கர்நாடகா, கேரள அரசுகள் போராட்டம் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று கர்நாடக அரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, " ஒன்றிய அரசுக்கு வருவாயைப் பெற்றுத்தரும் இரண்டாவது பெரிய மாநிலமாகக் கர்நாடகா உள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு அநீதி இழைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்திற்கு 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவிற்குக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 வரி செலுத்தினார் ரூ. 12 மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. இது அநியாயம் இல்லையா?. கர்நாடக மக்களின் நலனுக்காக நாங்கள் இங்குப் போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

Also Read: நீரில் மாசு ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனை குறைப்பு : புதிய மசோதாவை தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு!