India

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய SFI மாணவர் அமைப்பு : கேரளாவில் பரபரப்பு!

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் ஆரிப் முகமது கான் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்குத் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அம்மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆரிப் முகமது கான் அரசு கொடுத்த 64 பக்கத்தில் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு தனது உரையை ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டார். ஆளுநரின் இந்த செயல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இன்று ஆளுநர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொட்டாரக்கராவிற்கு சென்றார். அப்போது SFI என்ற மாணவர் அமைப்பினர் ஆளுநருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த ஆளுநர் தனது காரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கிச் சென்று தகராறு செய்தார்.

மேலும் அங்கு ஒரு கடைக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பிலிருந்து போலிஸார் ஆளுநரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

Also Read: அரசியலமைப்பின் முன்னுரையில் நீக்கப்பட்ட மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் : ஒன்றிய பாஜக அரசு அடாவடி !