India

பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது - EPFO நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி !

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் ஆதாரை அனைத்துக்கும் கட்டாயமாக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் நலத்திட்டச் சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமானதாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கும் பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரிக் கணக்கு இப்படிப் பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தங்களது பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என வருங்கால வைப்பு நிதி நிறுவனம்(EPFO ) கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் ஆதார் அட்டையை பயன்படுத்தி பிறந்த தேதியை சரி செய்ய முடியாது என்றும், ஆதார் அட்டையை ஒரு நபரின் அடையாளமாகத் பயன்படுத்த முடியும். பிறந்த தேதிக்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது என்றும் ருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO ) அறிவித்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Also Read: "மகன் திருமணம், அறுவடை இருக்கிறது" - பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் சரணடைய அவகாசம் கோரி மனு !