India

”வேதத்திற்கு எதிரான திறப்பு விழா” : மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சங்கராச்சாரியார்கள்!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.கவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துவிட்டன.

இதற்கிடையில், ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண்டுமா? என பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி, கூறியிருந்தார். மேலும் ராமர் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உத்தரகாட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சார்யா அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதியும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அயோத்தியில் கோவில் கட்டுமானங்கள் முழுமையாக முடியாத நிலையில் சாஸ்திரங்களுக்கு எதிராக புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார். இப்படி பா.ஜ.க அரசுக்கு எதிராக சங்கராச்சாரியார்கள் ஒன்றாக குரல் எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”திட்டத்திற்கு இந்தியில் பெயர் வைத்தால்தான் நிதி”.. கேரள அரசை பழி வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!