India

காணாமல் போன சிறுமி... ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் மீட்பு : விசாரணையில் சிக்கிய சிறுவன் - நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது வசாய் நகர். இங்கு 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுமி கடந்த கடந்த 1-ம் தேதி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

எனவே வேறு வழியின்றி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி பூட்டிய அறை உள்ளிட்டவைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டினுள் சென்ற போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே சிறுமி ஒருவர் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியை மீட்ட போலீசார், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரித்ததில், மீட்கப்பட்ட சிறுமியும், காணாமல் போன சிறுமியும் ஒன்று என்று தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், கதறி அழுதனர். பின்னர் இது காணாமல் போனதை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை துரித படுத்தினர்.

அப்போது சிறுமி கொலை வழக்கில் சிறுவன் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் இந்த சிறுமியை கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குடும்பத்தாரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது சிறுமி ஒரு நாள், அந்த சிறுவனை கிண்டல் செய்துள்ளார். இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த சிறுவன், சம்பவத்தன்று சிறுமியை யாருக்கும் தெரியாமல் கடத்தியுள்ளார். அப்போது சிறுமியை தாக்கி, அவரது கழுத்தை இறுக்கமாக நெரித்துள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இறந்துள்ளார். இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த சிறுவனுக்கு, அவரது தந்தையே உதவி செய்துள்ளார்.

அதன்படி சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் கட்டி ஒரு வார காலமாக மறைத்து வைத்துள்ளனர். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பியது விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், 8 வயது சிறுமியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மயக்க ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை.. கைது செய்யப்பட்ட சீனியர் மருத்துவர்.. - பின்னணி என்ன ?