India

Tinder மூலம் பழக்கம்.. இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த தோழி.. 5 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!

ராஜஸ்தானை சேர்ந்தவர் பிரியா சேத் (27). இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் இவர் Tinder என்ற ஆப்பையும் பயன்படுத்தியுள்ளார். அப்போது கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு விவான் கோலி என்ற பெயரில் நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர் தான் ஒரு பிசினஸ் மேன் என்று சொல்லி பிரியாவுடன் பழகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் நட்பாக மாறவே, இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போகவே, இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே உறவு சுமூகமாக சென்றுள்ளது. விவான் கோலி ஒரு பணக்காரர் என்ற எண்ணத்தில் பிரியாவும் அதிக அளவு செலவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, விவானை கடத்தி பணம் பறிக்க எண்ணியுள்ளார்.

அதன்படி 2018-ம் ஆண்டு தனது நண்பர்களான திக்ஷந்த் காம்ரா, லக்ஷயா வாலியா ஆகியோருடன் சேர்ந்து அவரை கடத்தியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்க எண்ணினர். ஆனால் அப்போது தான் தெரிந்தது, விவான் கோலியின் உண்மையான பெயர் துஷ்யந்த் ஷர்மா என்று.

மேலும் அவர் ஒரு தொழிலதிபர் இல்லை என்றும், ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் இருந்ததும் தெரியவந்தது. எனினும் பணம் கேட்டு மிரட்டியதால், அவரது குடும்பத்தாரிடம் இருந்து ரூ.3 லட்சம் வரை பணம் கிடைத்தது. எனினும், துஷ்யந்த் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். எங்கே தங்களை வெளியே காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் துஷ்யந்தை 10 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.

மேலும் அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் மூச்சுத்திணரவைத்து கொலை செய்தனர். பின்னர் சடலத்தை மறைப்பதற்காக ஒரு பெரிய சூட் கேஸையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் சடலத்தை சூட் கேஸில் வைத்து கொண்டு செல்லப்பட்டு வீசப்பட்ட நிலையில், அவரது உடல் போலீசாருக்கு கிடைத்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த கொலைக்கு காரணம் பிரியா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை தேடி பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு இந்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் பிரியா உட்பட அவரது நண்பர்கள் என 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனது. இதையடுத்து அவர்களுக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கொலை குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Also Read: உத்தரகாண்ட் : மலைக்கு மேலிருந்து செங்குத்தாக தொடரும் மீட்புப்பணி - இரண்டே நாளில் 31 மீட்டர் தோண்டி சாதனை!