India

உத்தரகாண்ட் : மலைக்கு மேலிருந்து செங்குத்தாக தொடரும் மீட்புப்பணி - இரண்டே நாளில் 31 மீட்டர் தோண்டி சாதனை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில், சுரங்கத்துக்குள், 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாகப் பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல குழாய் அமைத்து, 10 நாட்களாகத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்னர் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 பேர் குறித்த வீடியோ காட்சி வெளியானது. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்பு படையினர் அவர்களுடன் பேசி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில்,சுரங்க பாதையில் துளையிடப் பயன்படுத்திய ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது.

இதனால் இனி அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்றுஏற்பாடாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடுடப்பட்டது. ஆனால், இடிபாடுகளில் அதிக அளவு மணல் விழுந்த காரணத்தால் அந்த பணியிலும் தொய்வு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேலிருந்து கீழாக துளையிடும் பணி நேற்று தொடங்கியது. மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்ட நிலையில், தற்போது 86 மீட்டர்களில் 31 மீட்டர் தோண்டும் பணி முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தாக துளையிடும் பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்தால் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடைந்து தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Also Read: பாலஸ்தீன கைதிகளை கொடுமைப்படுத்துகிறது இஸ்ரேல் : விடுவிக்கப்பட்ட பெண் கைதி பகிரங்க குற்றச்சாட்டு !