India

பழுதடைந்த துளையிடும் இயந்திரம்: உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணியில் பின்னடைவு- வரவழைக்கப்பட்ட ஆஸ். நிபுணர்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில், சுரங்கத்துக்குள், 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாகப் பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல குழாய் அமைத்து, 10 நாட்களாகத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்னர் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 பேர் குறித்த வீடியோ காட்சி வெளியானது. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்பு படையினர் அவர்களுடன் பேசி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

arnold dix

சுரங்க பாதையில் துளையிடப் பயன்படுத்திய ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்துவிட்டதால், இனி அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்றுஏற்பாடாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுரங்கப்பாதையின் மேலிருந்து குடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இது போன்ற மீட்பு பணிகளில் அதிக அனுபவம் கொண்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read: 24 பிணையக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் : 39 சிறைவாசிகளை விடுதலை செய்த இஸ்ரேல் - முழு விவரம் என்ன ?