India

பைக்கில் வந்த மர்ம நபர்கள்... பெட்ரோல் பங்கில் பட்டப்பகலில் கடத்தல்... வேடிக்கை பார்த்த பொதுமக்கள் !

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நகா சந்திரவதனி என்ற பகுதி உள்ளது. இங்கே இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் தினமும் பலரும் பெட்ரோல் போடுவது வழக்கம். அதே போல் கடந்த 20-ம் தேதி (2 நாட்களுக்கு) முன்னர் சிலர் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், மற்றொருவர் முகம் தெரியாத வகையில் துணியால் மறைந்தும் இருந்துள்ளனர். ஹெல்மெட் அணிந்த நபர் பைக்கில் காத்திருந்த நேரத்தில், முகமூடி அணிந்த நபர், சற்று அருகில் சென்று இளம்பெண் ஒருவரை பிடித்து இழுத்து வந்தார். அந்த பெண் வர மறுத்தபோதிலும், இந்த நபர் அவரை இழுத்து வந்துள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை வலுக்கட்டயமாக பைக்கின் பின்னால் தூக்கி அமரவைத்தார். அவர் கீழே இறங்க முயன்றபோதும், அவரை கட்டாயப்படுத்தி பைக்கில் அமரவைத்து கடத்தி சென்றனர் அந்த மர்ம நபர்கள். பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை 2 மர்ம நபர்கள் கடத்தி செல்வதை அங்கே பெட்ரோல் போட வந்தவர்கள், அங்கிருந்தவர்கள் என அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 19 வயது கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதுகுறித்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இளம்பெண் கடத்தல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த மர்ம நபர்கள்.. கண்டு கொள்ளாததால் ஆசிட் வீச்சு? - வலை வீசும் போலிஸ்!