India

இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த மர்ம நபர்கள்.. கண்டு கொள்ளாததால் ஆசிட் வீச்சு? - வலை வீசும் போலிஸ்!

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவருக்கு அண்மையில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர் அவரது குடும்பத்தினர். அந்த மாப்பிள்ளை அனைவருக்கும் பிடித்து போகவே, உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சூழலில் சம்பவத்தன்று இந்த இளம்பெண் தனது தாயுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது முகத்தை மூடி கொண்டு 2 சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர். அதனை இந்த பெண்ணும் தவிர்க்கவே, உடனே தாங்கள் கொண்டு வந்த ஆசிட்டை அந்த பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு உடனே அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் துடித்துடித்து அலறிய அந்த பெண்ணை, தாயும் அக்கம்பக்கத்தினரும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் உடனே கோரக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில் அவரை அங்கே கொண்டு சென்றனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, 7% தீக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சி உள்ளிட்டவை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் முகத்தை மூடி கொண்டு திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு அந்த நபர்கள் தெரிந்தவரா? காதல் விவகாரமே? அல்லது முன்பகையா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திருமணமாக காத்திருந்த இளம்பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி சென்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குப்பென்று பற்றிய தீ... சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான முதியவர்.. புகைப்பிடிக்க முயன்றபோது சோகம் !