India

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் மீது தாக்குதல் : 4 போலிஸார் அராஜகம் - ஆந்திராவில் நடந்தது என்ன?

ஆந்திர மாநிலம் எலமஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சையத் அலி முல்லாகான். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சையத் அலி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாடா பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்பு கருதி 'திசா ஆப்' என்ற பெயரில் மொபைல் ஆப் ஒன்றை போலிஸார் தயாரித்துள்ளனர். இந்த ஆப்பை மக்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் போலிஸார் பரவாடா பேருந்து நிலையத்திலிருந்த, பொதுமக்களின் செல்போன்களி பதிவிறக்கம் செய்து கொடுத்தனர். அப்போது அங்குப் பேருந்திற்காக ராணுவ வீரர் சையத் அலி காத்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகே வந்த பெண் காவலர் ஒருவர், செல்போனை தரும்படியும் அதில், திசா ஆப்-பை பதிவிறக்கம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதற்கு அவர் "நான் காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளன். எனக்கு ஏன் இந்த ஆப்? என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர் ராணுவ வீரரை பொது இடம் என்றும் பார்க்காமல் தாக்கியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பிறகு இதுபற்றி அறிந்து அங்கு வந்த மற்ற மூன்று போலிஸார் ராணுவ வீரரை அடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கு அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலிஸார் ராணுவ வீரரை விட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்துக் காவல் துறை ஆணையர், ராணுவ வீரரை தாக்கிய 4 காவலர்களையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

Also Read: 5 மாதங்களில் 146 முறை.. ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்.. கேரளாவில் ஷாக் !