India

உலக பட்டினி குறியீடு : “இப்படித்தான் கணக்கெடுப்பு நடத்தப்படுதாம் !” - ஸ்மிருதி இரானி பேச்சால் அதிர்ச்சி !

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உலக பட்டினி குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்தியாவில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதார சூழல்களால் வறுமை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த வாரம் உலக அளவிலான பட்டினி குறியீடு தரவரிசை பட்டியல் வெளியானது.

Concern Worldwide and Welthungerhilfe என்ற ஜெர்மனியின் அமைப்பு இந்தாண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த தரவரிசையில் 125 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 111-வது இடத்தில் உள்ளது.

உலக பட்டினி குறியீட்டில் (Global Hunger Index) ஆண்டுதோறும் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலை மோசமாகி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். மேலும் ஒன்றியத்தில் ஆளும் பாஜகவால்தான் இந்தியாவின் நிலை மோசமாகி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் உலக பட்டினி குறியீடு கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் FICCI இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார். அப்போது அங்கிருக்கும் பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது உலக பட்டினி குறியீடு குறித்து இவர் பேசியுள்ளது தற்போது பலர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இப்போது தலைப்பு செய்திகளாக இருப்பதில் ஒன்று தான் உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) உள்ளது. இது எப்படி கணக்கிடப்படுகிறது? 140 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் சுமார் 3000 மக்களுக்கு GALAB மூலம் போன் கால் வருகிறது. (GALAB என்பது ஜெர்மனியின் ஆய்வு நிறுவனம்).

அந்த போன் காலை எடுத்ததும், நீங்கள் பசியோடு இருப்பீர்களா என்று அவர்கள் கேட்பார்கள். நீங்கள் ஆம் என்றால், அதைக்குறித்து கொள்வார்கள், இப்படித்தான் உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) கணக்கிடப்படுகிறது." என்று கூறினார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த தரவரிசையில் 125 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த 2020-ல் 94வது இடத்தில் இருந்த இந்தியா, 2021-ல் 101-வது இடத்தில் இருந்தது.

தொடர்ந்து கடந்த 2022-ல் 107-வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா, மேலும் தற்போது 111-வது இடம் பிடித்து சரிந்து காணப்படுகிறது. உலக பட்டினி குறியீட்டில் மொத்தம் 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் இருப்பதற்கு ஒன்றிய பாஜக அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா ஆண்டுக்கு ஆண்டுக்கு தொடர்ந்து பின்தங்கி இருக்ப்பதற்கு மோடி அரசு தான் காரணம் என பொதுமக்களும், இணையவாசிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அதானி - மோடி கூட்டணிக்கு செக் வைக்கும் இந்தியா கூட்டணி : விழிபிதுங்கி கிடக்கும் பா.ஜ.க கூட்டம் !