India

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி.. புகைப்படங்களை பகிர்ந்து விளம்பரம் தேடிய பாஜக பெண் நிர்வாகி கைது !

பொதுவாக குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களையோ, பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்தோ, பாலியல் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகளின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்தால் அது சட்டப்படி பெருங்குற்றமாகும்.

இந்த சூழலில் மஹாராஷ்டிராவை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக தற்போது அவர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால் என்ற நகரம் உள்ளது. இங்கிருக்கும் இடத்தில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி உமர்காட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளி முடிந்து வழக்கம்போல் தனது வீட்டுக்கு சிறுமி தனியே நடந்து சென்றுள்ளார்.

இதனை கண்ட மர்ம நபர் ஒருவர், அந்த சிறுமியிடம் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு விடுவதாக கூறி, தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கை பாதியில் நிறுத்தி காட்டுப்பகுதி ஒன்றில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியை பலரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த டாக்டர் சைலி ஷிண்டே என்பவரும் சென்று சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியுடன் சேர்ந்து புகைப்படமும், வீடியோவும் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதையடுத்து பாலியல் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் விவரங்களை பொதுவெளியில் பகிர்ந்ததாக பாஜக மகளிரணி நிர்வாகி சைலி ஷிண்டேவுக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைலி ஷிண்டே மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து சைலி ஷிண்டே பேசுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து, ஆறுதலும், தைரியமும் அளித்தேன். பின்னர் அவருடன் சேர்ந்து எனது போனில் போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன். ஆனால் யாரோ அதனை எனது மொபைலில் இருந்து எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் என் மீதுள்ள ஞாயத்துக்காக குரல் கொடுப்பேன்." என்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விளையாட்டு வெறுப்பை பரப்பும் கருவி அல்ல” : பாக். வீரருக்கு எதிராக முழக்கம் - உதயநிதி கண்டனம் !