India

NewsClick விவகாரம் : ஒன்றிய அரசு வாதத்தை ஏற்க மறுத்த டெல்லி நீதிமன்றம்.. FIR நகலை வழங்க உத்தரவு !

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இணைய ஊடகமான NewsClick நிறுவனம், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. பாஜக அரசின் ஊழல்கள், என பலவற்றையும் தங்கள் இணையதளத்தில் செய்தியாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வந்தது. இப்படி தொடர்ந்து பா.ஜ.க அரசின் முகத்தை கிழித்தெறிந்து வந்ததால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவியது.

கடந்த 2021ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாக NewsClick அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால் ஆதாரம் இல்லாததால், உச்சநீதிமன்றம், NewsClick மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இருப்பினும் அஞ்சாமல் தொடர்ந்து தங்கள் பணிகளை நேர்மையாக செய்து வந்த இந்த ஊடகத்துக்கு எதிராக பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

அதன் ஒரு பகுதி தான் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு NewsClick பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் NewsClick இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 3-ம் தேதி NewsClick இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்தது. அதோடு சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து, பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட உடமைகளையும் பறிமுதல் செய்தது. தொடர்ந்து NewsClick நிறுவனம் மீதும், நிறுவனர்கள் மீதும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து NewsClick ஊடகத்துக்கு சீல் வைத்ததோடு, UAPA சட்டத்தின் கீழ், ஊடகத்தின் எடிட்டர் பிரபிர் புரக்யாஸ்தா, HR தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். ஊடகத்தின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள், சக பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,

ஊடகத்தின் முழு சுதந்திரத்தையும் ஒன்றிய பாஜக அரசு பறித்து வருகிறது. இது ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பி வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்வுக்காக டெல்லியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக் கொண்டு செய்திகளை வெளிட்டதாக கூறப்படும் புகார்களை நியூஸ் கிளிக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட FIR நகலையும் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், FIR நகலை வேண்டி கைது செய்யப்பட்ட NEWSCLICK நிறுவனர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்லி காவல்துறை ஆணையர் அலுவலகம் மூலம் மட்டுமே வழக்கு நகலைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் ஒன்றிய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து வழக்கு நகலைப் பெற அனைத்து உரிமையும் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்து, கைது செய்யப்பட்ட ஊடக ஆசிரியர்களுக்கு FIR நகலை வழங்க உத்தரவிட்டுள்ளது.

Also Read: “சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!