India

”பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படக் கூடாது” : அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் குழுமத்தின் இயக்குநர்கள் பசந்தத் பன்சால் மற்றும் பங்கஜ் பன்சால் ஆகிய இருவரையும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அமலாக்கத்துறை அதிக அதிகாரம் கொண்டதாக உள்ளது. அதன் செயல்பாட்டில் பழிவாங்கும் செயல் வெளிப்படக் கூடாது. அதிக அளவு அக்கறையுடனும், நேர்மையாகவும் அமலாக்கத்துறை செயல்படவேண்டும்.

ஒருவர் சம்மனுக்குப் பதிலளிக்காமலோ, ஆஜராகாமலோ இருந்தால் அதனை மட்டும் காரணமாக கொண்டு அவரை கைது செய்ய முடியாது. ஒருவர் கைது செய்யப்படும் போது கைதுக்கான காரணத்தை எழுத்து மூலம் தெரிவிக்கும் நடைமுறையை அமலாக்கத்துறை பின்பற்ற வேண்டும்.

இந்த வழக்கில் அப்படி எழுத்து மூலம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என கண்டனம் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்று உத்தரவிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Also Read: ”சீன நிதியில் இயங்கும் PM CARESக்கு என்ன நடவடிக்கை?” : மோடி அரசுக்கு பிரசாந்த் பூஷன் கேள்வி!