India

காலையில் இருந்து ரெய்டு.. பாஜகவை விமர்சித்த NEWSCLICK ஊடகத்துக்கு சீல் வைத்த டெல்லி போலிஸ்!

டெல்லியில் தலைமை இடமாகக் கொண்டு NewsClick என்ற இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தில் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. அதேபோல் தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.கவின் தந்திர வேலைகளும் இந்த இணையதளத்தில் செய்தியாகவும், கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளது.

இப்படி தொடர்ந்து பா.ஜ.க அரசின் முகத்தை கிழித்தெறிந்து வந்ததால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவியது. 2021ம் ஆண்டு NewsClick அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். பின்னர் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், NewsClick மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு NewsClick பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் NewsClick இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் NewsClick இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்துள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலிஸாரின் இந்த ரெய்டுக்கு சக பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாகவும் கருத்து தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஊடகத்தின் முழு சுதந்திரத்தையும் ஒன்றிய பாஜக அரசு பறித்து வருகிறது. இது ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பி வருகிறது. இந்த நிலையில், காலையில் இருந்து நடத்தி வரப்பட்ட வந்த ரெயிடை தொடர்ந்து, தற்போது டெல்லியில் உள்ள NewsClick இணையதள செய்தி நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசின் இந்த நடவடிக்கைக்கு தற்போது ஊடகவியலாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. அரசின் தோல்வியை மக்களிடமிருந்து திசை திருப்பும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும், ஊடக நிறுவனங்களை கையகப்படுத்துவதன் மூலம் தங்கள் கட்சியின் கருத்தியலுக்கு ஊடகங்களை ஊதுகுழலாக மாற்ற பாஜக அரசு முயற்சிப்பதாகவும் இந்தியா கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

Also Read: மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாறு என்ன ? சாதிவாரி கணக்கெடுப்பால் இந்தியாவில் நடந்த மாற்றம் என்ன ?