India

காவிரி ஆணைய உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும்.. கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரியில் கர்நாடக அரசு உரியத் தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு தண்ணீரைப் பெற்று வருகிறது. அண்மையில் காவிரியில் தண்ணீர் தரக் கூடாது என்றும், தற்போது திறந்து விடப்பட்டு வரும் தண்ணீரையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநில பா.ஜ.க, அம்மாநில அரசுக்கு மிரட்டல் விடுத்தது.

இதையடுத்து கர்நாடகாவில் மழை இல்லாதா காரணத்தால் அங்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வந்த நீரை கார்நாடக அரசு நிறுத்தியது. பின்னர் உடனே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப் படி ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு சந்தித்தது.

அப்போது தமிழ்நாட்டிற்கான நீரை கர்நாடகா திறந்து விட அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கான உரிமை உச்சநீதிமன்றம் மூலம்தான் பெற்று வருகிறோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி ஆணைய உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Also Read: காவிரி விவகாரம்.. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு MPக்கள் குழு!