India

பூட்டிய வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் : பெங்களூருவில் அதிர்ச்சி: போலிஸ் விசாரணை!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஒலேயரஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் நேபாளத்தைச் சேர்ந்த காலேசரேரா என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி லட்சுமி சரேரா, உஷா சரேரா, பூல் சரேரா ஆகியோருடன் கோழிப்பண்ணையில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு முடித்துவிட்டு இரவில் தூங்கியுள்ளனர். இதையடுத்து இன்று காலை கோழிப்பண்ணை உரிமையாளர், காலே சரேராவை தொலைபேசியில் அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் அதே கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வரும், காலே சரேராவின் உறவினரை தொலைபேசியில் அழைத்து தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் காலே சரேரா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது. கதவைத் தட்டிப்பார்த்தும் கதவை யாரும் திறக்கவில்லை.

இதனால் கதவு பூட்டுத் துவாரம் வழியாகப் பார்த்துள்ளார். உள்ளே காலே சரேரா உள்பட 4 பேரும் அசைவற்ற நிலையிலிருந்துள்ளனர். இதனால் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் போலிஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் 4 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அவர்கள் தங்கிய வீட்டை ஆய்வு செய்தபோது, வீட்டுக்குள் கொசுவை விரட்ட கரிக்கட்டையால் புகைமூட்டம் போட்டிருந்த அடையாளங்கள் இருந்துள்ளது. இதனால் இவர்கள் புகைமூட்டம் அதிகம் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் இறந்து விட்டார்களா என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீலிங் செய்ததால் நேர்ந்த விபத்து.. சுக்குநூறாய் நொறுங்கிய பைக்.. மருத்துவமனையில் TTF வாசன்!