India

மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை.. போலிசில் சரணடைய சென்ற கணவருக்கு நேர்ந்த சோகம்.. -தெலங்கானாவில் அதிர்ச்சி!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தின் அதிலாபாத்தை அடுத்துள்ள பங்கர்குடா என்ற பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவருக்கும் ஆர்மூர் என்ற பகுதியை சேர்ந்த தீபா (22) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்து இருவரும் அருண் வீட்டில் வசித்து வந்த நிலையில், வழக்கமாக நடக்கும் தம்பதி சண்டை நடந்துள்ளது.

அந்த சமயத்தில் அருணுக்கு அவரது மனைவி தீபா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தன்னை விட்டு வேறு ஒருவரை காதலிப்பாரோ என்று தீபா மீது ஏற்பட்ட சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்தது. இதனால் மேலும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிகழ்வால் தீபா மனதளவிலும் உடலளவிலும் மிகவும் காயமுற்றிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தீபா தனது பெற்றோருக்கு தெரிவித்து அழுத சமயத்தில் எல்லாம், அவர்கள் தீபாவை சமாதான படுத்தி வந்துள்ளனர். இதனாலே அருண் மேலும் தீபாவை சித்திரவதை செய்து வந்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற தீபாவை 1 வாரத்திற்கு பிறகு அருணின் தாயார் சென்று சமாதான படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

எனினும் அருண் மாறாமல் மீண்டும் தனது மனைவி தீபாவை கொடுமை செய்து வந்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் இதுகுறித்து கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெரும் ஆத்திரம் கொண்ட அருண், தனது மனைவி தீபாவை அடித்து தாக்கியுள்ளார். இதில் சுவற்றில் மோதி தீபா மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது.

எனினும் மீண்டும் கோபம் அடங்காத அருண், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தீபாவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வரும் முன்பே, தனது மனைவியை கொன்றதற்காக போலீசில் சரணடைய பைக்கில் சென்றார். அப்போது வேகமாக சென்ற அவர் எதிரே வந்த லாரி ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசுக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த கணவன் அருண், மனைவி தீபா ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கொலை செய்து போலீசில் சரணடைய சென்றபோது விபத்தில் சிக்கி கணவரும் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனியர் மாணவர்.. பள்ளி பேருந்தில் நடந்த கொடூரம் !