India

சகோதரரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பாஜக நிர்வாகி மகன் உட்பட 10 பேர் கைது.. ரக்ஷாபந்தன் தினத்தில் ஷாக்!

கடந்த 30-ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிவிட்டு வாழ்த்து தெரிவிப்பர். நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த பண்டிகையின்போது 2 சகோதரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூரில் வசிக்கும் 19 மற்றும் 16 வயது கொண்ட 2 சகோதரிகள், ரக்ஷாபந்தன் தினத்தை 19 வயது பெண்ணின் வருங்கால கணவருடன் கொண்டாடினர். அப்போது அவர்கள் வெளியே சென்று பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் மந்திர் ஹசௌத் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பிடிங்கினர்.

தொடர்ந்து அவர்கள் பின்னாலே மற்ற பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், இவர்களிடம் தகராறு செய்ததோடு அந்த 2 சகோதரிகளையும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை தடுக்க முயன்ற சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கும் அந்த கும்பல் சரமாரியான அடியை கொடுத்தது.

பின்னர் அங்கிருந்து அனைவரும் தப்பியோடிய பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கும் காவல் நிலையம் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 10 பேர் கொண்ட கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கும்பலில் முக்கிய குற்றவாளியாக உள்ளூர் பாஜக நிர்வாகியான லட்டுமி நாராயண சிங் என்பவரது மகன் பூனம் தாகூர் என்பது தெரியவந்துள்ளது. இந்த பூனம் தாகூர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன.

அதிலுள்ள கொலை வழக்குக்காக கடந்த 2019- ல் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 17-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தவர் ஆவார். குடியரசுத் தலைவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சத்தீஸ்கருக்கு சென்ற நேரத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரர்கள் தினத்தன்று 2 சகோதரிகள் பாஜக நிர்வாகியின் மகன் உட்பட 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சொந்த தங்கையை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை.. வேதனையோடு நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு !