India

பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை.. ரத்தத்தில் யோகிக்கு கடிதம் எழுதிய மாணவிகள்: அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ராஜீவ் பாண்டே. இவர் அப்பள்ளியில் படிக்கு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். அப்போது அவர் பெற்றோர்களை மிரட்டியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ரத்தத்திலேயே அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "பள்ளி தலைமை ஆசிரியர் எங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த பிரச்சனையை நாங்கள் உங்களிடம் நேரில் விவாதிக்க விரும்புகிறோம். எங்களுக்கு எங்கள் பெற்றோர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா.. மவுனம் காக்கும் மோடி அரசு!