India

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி.. 2 மாதம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை கொன்ற கொடூரம் !

ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் பகுதியை அடுத்து அமைந்துள்ளது மார்கொண்டாபுரம் என்ற கிராமம். இங்கு வெங்கடேஷ்வர்லு. இவருக்கும் வேங்கட நரசம்மா (31) என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இந்த தம்பதிக்கு ஸ்ரவந்தி (15), மஞ்சுளா (13), மனோஜ் (10) ஆகிய 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், கணவர் வெங்கடேஷ்வர்லு குடித்து விட்டு குடும்பத்தில் தகராறு செய்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தனது மனைவி நரசம்மாவை தினமும் அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் உடலளவு, மனதளவு என பாதிக்கப்பட்ட நரசம்மா, தனது 3 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். 2 மாதங்கள் ஆகியும் தனது மனைவி மீண்டும் வீடு திரும்பாத நிலையில் ஆத்திரம் கொண்டுள்ளார் வெங்கடேஷ்வர்லு. இதனால் குடும்பத்தோடு அனைவரையும் கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி கடந்த 21-ம் தேதி வெங்கடேஷ்வர்லு, தனது மகளை சந்திக்க அவரது பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது தனது 2-வது மகள் மஞ்சுளாவை சந்தித்து ஆசிரியரிடம் கூறிவிட்டு அவரை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தந்தை மனம் மாறி தன்னை அழைத்து செல்கிறார் என்ற எண்ணத்தில் சென்ற சிறுமியை ஆட்டோவில் யாரும் இல்லாத கல்மேட்டுப் பகுதியில் கூட்டி சென்றுள்ளார்.

அங்கே வைத்து அவரை கொடூரமாக கொலை செய்து அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். இதனிடையே மஞ்சுளா வீடு திரும்பவில்லை என்று தாய் பள்ளிக்கு சென்று கேட்கவே, அவரது தந்தையுடன் சென்று விட்டதாக ஆசிரியர் கூறியுள்ளார். இதனை கேட்டு பதறி போன தாய், அங்கும் இங்கும் தேடி இறுதியில் கால்மேட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கே மஞ்சுளா சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்த தாய் கதறி அழுதுள்ளார். தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கையில் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். தற்போது வெங்கடேஷ்வர்லு சிறையில் உள்ளார்.

ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன், குழந்தையை கொலை செய்து விடுவேன் என்று வெங்கடேஷ்வர்லு கூறியதாக அவ்ரது மனைவி புகார் தெரிவித்த நிலையில், தற்போது உண்மையாகவே அவர் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: காதலி சுட்டுக் கொலை.. கூலாக ஷாப்பிங் சென்று சட்டை வாங்கிய காதலன்: காட்டிக் கொடுத்த CCTV!