India

கோடாரியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உ.பி சிறுமி .. கைது செய்யப்பட்ட குடும்பம்.. காரணம் என்ன?

உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி என்ற பகுதியை அடுத்துள்ளது முசாபர்பூர் திக்ரி என்ற கிராமம்.. இங்கு மன்ரகான் சிங் என்பவர் தனது மகள் மற்றும் மகன்கள் என குடும்பத்தோடு வசித்து வருகிறார். இதில் 17 வயதான ப்ரீத்தி, தனது பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சகோதரர் அவரை முதலில் கண்டித்துள்ளார்.

ஆனால் இளம்பெண், அவர்கள் பேச்சை கேட்காமல் தொலைபேசியிலும் தனது உறவை தொடர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இது சகோதரர்கள், தந்தை என அனைவருக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் இந்த பெண்ணை கண்டித்துள்ளனர். இருப்பினும் அதனை செவிமடுக்காத இவர், இரகசியமாக பேசி வந்துள்ளார்.

இந்த சூழலில் இதுவும் அவரது குடும்பத்தாருக்கு தெரியவரவே, சம்பவத்தன்று பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது தங்கையை ராதேஷ்யாம் சிங் மற்றும் கன்ஷ்யாம் சிங் ஆகிய இரண்டு சகோதரர்களும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் பெரிய பூதாகரம் ஆன நிலையில், தந்தை, சகோதரர்கள் என அனைவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ப்ரீத்தியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த இளம்பெண் ப்ரீத்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை செய்த தந்தை மற்றும் சகோதரர்களை கைது செய்தனர்.

தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞருடன் இரகசியமாக பேசிய 17 வயது இளம்பெண்ணை தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான செக்.. வங்கியில் விசாரித்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !