India

சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை.. சிறுவர்கள் ஆசனவாயில் மிளகாயை திணித்து கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !

பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதை விட கொடுமையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் சிலர் 15 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களை திருடியதாக பிடித்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் சிறுநீரைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதோடு நிற்காத கொடூரர்கள் சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்து கொடுமையான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் சில அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலிஸார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்புடையதாக கருதப்படும் 6 பேரை கைது செய்தனர். பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெறும் இதுபோன்ற கொடூரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: PUBG பழக்கம்.. நண்பரின் மனைவியை காத்திருந்து வன்கொடுமை செய்த நபர்.. ஆந்திராவில் அதிர்ச்சி !