India

காணாமல் போன 5 வயது சிறுமி.. குப்பை கிடங்கில் சடலமாக மீட்கபட்ட அவலம்.. கேரளாவை அதிர வைத்த பயங்கரம் !

கேரள மாநிலம் ஆலுவா என்ற பகுதியில் பீகாரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்துள்ளார். இவருக்கு 5 வயதில் பெண் பிள்ளை உள்ள நிலையில், அந்த குழந்தை அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) அந்த சிறுமி காணாமல் போயுள்ளார்.

இதனால் பெற்றோர்கள் அங்கும் இங்கும் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை என்பதால் அருகில் இருக்கும் போலிசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் அமைந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்தையும் வைத்து விசாரித்தனர்.

அப்போது அதில் சந்தேகம் ஏற்படும்படி நபர் ஒருவர் இருந்துள்ளார். பின்னர் அவரை பிடித்து விசாரிக்கையில், சிறுமி குறித்து சந்தேகத்திற்குரிய வகையில் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொள்ளும்போது, சிறுமியை அந்த நபர் கடத்தியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரிக்கையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஷ்பக் ஆலம் (Ashfaq Alam) என்றும், 2 நாட்களுக்கு முன்னர் தான் சிறுமியின் மேல் வீட்டுக்கு குடி வந்தார் என்றும், சம்பவத்தன்று சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி தனியே கூட்டி சென்றதும் தெரியவந்தது.

மேலும் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கொலை செய்ததையும் ஒப்புக்கொண்ட அந்த நபர், சிறுமியின் சடலம் இருக்கும் இடத்தையும் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சதுப்பு நிலத்தில் குப்பை கிடங்கு அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது சிறுமியின் உடல் பகுதிகளில், பிறப்புறுப்பு உள்ளிட்டவைகளில் காயம் இருந்தது தெரியவந்தது. மேலும் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி அஷ்பக் ஆலமை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆற்றின் அருகே ஆசையாக Selfie எடுத்த புதுமண தம்பதி.. விருந்துக்கு சென்ற இடத்தில் சோகம் !