India

மணிப்பூரில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ராணுவ வீரர்.. மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 90 நாட்களுக்கு மேலாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு நாளும் மணிப்பூர் கொடூரம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

தற்போது, இளம்பெண்ணுக்கு பாதுகாப்பு படை வீரர், பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இளம்பெண் ஒருவரை, துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியிலிருந்த பாதுகாப்பு படை வீரர் சதீஷ் பிரசாத் என்பவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: என்னால் முடிந்தது என்றால் ஏன் மணிப்பூர் முதல்வரால் முடியாது?: கேள்வி எழுப்பும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர்!