India

மனைவியை அழைக்க சென்றவரை உயிரோடு தீ வைத்து எரித்த பெண் வீட்டார்.. அலறி துடித்த கணவர்.. காரணம் என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் தேவரி பாகியா பகுதியை சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மேந்திரா என்பவருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடித்த சில நாட்களில் இதே ப்ரீத்திக்கும் அவரது கணவர் தர்மேந்திராவுக்கும் இடையே சிறிய சண்டை தொடர்ந்து வந்துள்ளது.

அவ்வாறு சண்டை ஏற்படும் போதெல்லாம் ப்ரீத்தி அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று, அங்கேயே சில நாட்கள் தங்கி விடுவதுமாக இருந்துள்ளார். அதன் பின்னர் தர்மேந்திரா தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.

இதனிடையே மூன்று மாதங்களுக்கு முன்னர் ப்ரீத்திக்கும், தர்மேந்திராவுக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் வழக்கம் போல ப்ரீத்தி சண்டையிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். சில நாட்கள் ஆகியும் மனைவி வீட்டுக்கு வராததால் எப்போதும் போல தர்மேந்திரா மனைவியை அழைக்க மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு தர்மேந்திராவுக்கும் மனைவி வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி வீட்டார் தர்மேந்திராவை பிடித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அவர் அலறித்துடித்துள்ளார்.

தர்மேந்திராவின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இது குறித்து அறிந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து ப்ரீத்தியின் தாய் ஷில்பா, சகோதரர் அஜய் சிங் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

Also Read: தமிழ்நாட்டுக்கு பயிற்சி மேற்கொள்ள வாருங்கள்.. மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு !