India

18 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. உடந்தையாக இருந்த பெண்கள்.. மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி !

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது மணிப்பூரில் நடைபெற்றுவரும் ஒவ்வொரு கொடுமைகளும் தற்போது வெளியவந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் அங்கு தற்போது 18 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியிலான எஃப்.ஐ.ஆர் தகவலின்படி கடந்த மே 15-ம் தேதி அன்று குக்கி சமூகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மெய்தி இனத்தை சேர்ந்த பெண்களிடம் சிக்கியுள்ளார். அவர்கள் அந்த பெண்ணை ஆயுதமேந்திய சில ஆண்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்துள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மேலும், அதில் 3 பேர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணை கொலை செய்வது குறித்து அவ்ர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அந்த பெண் அங்கிருந்து தப்பி சாலையில் சென்ற கார் ஒன்றில் ஏறி, பக்கத்து மாநிலமான நாகாலாந்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீபத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட விடியோக்கள் வெளியான நிலையில், அந்த பெண் துணிந்து காவல்நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளிக்க இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

Also Read: மணிப்பூரில் மானபங்கபடுத்தப்பட்ட கார்கில் ராணுவ வீரரின் மனைவி.. எங்கே பதுங்கியுள்ளார் அண்ணாமலை ?