India

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்ததில் என்ன தவறு ? -பிராமணர் சங்க தலைவரின் கருத்தால் அதிர்ச்சி !

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகரின் இந்த கொடூரச் செயலுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பா.ஜ.க அரசு பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும், அவரின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதையும் இடித்துத் தள்ளியது.

அதனைத் தொடர்ந்து சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவுக்கு ஆதரவாக அகில இந்திய பிராமின் சமாஜ் களமிறங்கியுள்ளது. பழங்குடியினரான தஷ்மத் ராவத்தின் முகத்தில் சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீட்டை இடித்த மாநில அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய பிராமண சமாஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தவிர குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவ பிராமின் சமாஜ் சார்பில் 51,000 ரூபாய் நிதி திரட்டி அவரின் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு உதவும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகருக்கு ஆதரவாக பிராமணர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பிராமண சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில், போராட்டம் நடத்திய அகில இந்திய பிராமண சங்க தலைவர் குல்தீப் பரத்வாஜ்ஜிடம் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர் , அதற்கு பதிலளித்த அவர், "ப்ரவேஷ் சுக்லா மது அருந்தியது தவறுதான். அதை மறுக்கவில்லை. ஆனால் அவர் அந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்ததில் என்ன தவறு இருக்கிறது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இறந்த பெண்ணின் சடலத்துக்கு நேர்ந்த கொடுமை.. அதிக சக்தி கிடைக்கும் என மோசமான செயலை செய்த இருவர் கைது !