India

”தக்காளி ஏற்றி வந்த மினி லாரி கடத்தல்”.. கர்நாடக மாநிலத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்!

பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் விலை உயர்வால் தக்காளிக்கே போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என பலரும் கிண்டல் அடித்து வரும் நிலையில் பல இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவில் விவசாய பண்ணையில் இருந்து ரூ.50 கிலோ தக்காளி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தக்காளி ஏற்றிச் சென்ற மினி லாரி ஒன்று கடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரிலிருந்து கோலார் நோக்கி மினி லாரி ஒன்றில் 250 பெட்டிகளுடன் தக்காளியை விவசாயி ஒருவர் வாடகைக்கு எடுத்துச் சென்றார். இந்த வாகனம் பீனியா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மூன்றுபேர் கொண்ட கும்பல் வேண்டும் என்றே மினி லாரி மீது மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் கார் சேதமடைந்ததாகக் கூறி லாரி ஒட்டுநரிடமும், தக்காளி ஏற்றி வந்த விவசாயி இடமும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர் அந்த மூன்று பேரும் விவசாயியை இறக்கிவிட்டு விட்டு தக்காளியோடு சேர்த்து மினி லாரியை கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாகக் கர்நாடகாவில் தக்காளி திருடப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நான் பாதிக்கப்பட்ட நபர் இல்ல”: சிறுநீர் கழித்த விவகாரத்தில் போலி நபரை வைத்து நாடகமாடிய பாஜக; உண்மை என்ன?