India

புதுமண தம்பதி உட்பட 5 பேர் கோடாரியால் கொடூர கொலை.. சகோதரன் வெறிச்செயல்.. - திருமணமாகி மறுநாளே அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை அடுத்துள்ளது அர்சரா என்ற கிராமம். இங்கு ஷிவ் வீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், பெற்றோர், சகோதரர்கள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் இவரது இளைய சகோதரன் சோனுவுக்கு அண்மையில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி கடந்த வியாழக்கிழமை சோனுவுக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமண ஊர்வலத்துக்காக அர்சராவில் இருந்து எட்டாவா மாவட்டத்தில் உள்ள கங்காபுராவுக்குச் சென்றனர். அங்கே பெண் வீட்டுக்கு சென்றபின் அனைவரும் கூத்தும் கும்மாளமுமாக இருந்துள்ளனர். திருமணம் நல்லபடியாக முடிந்தது என்று மிகவும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.

தொடர்ந்து இந்த மகிழ்ச்சியை அவர்கள் மறுநாளும் ஆடல் - பாடலுடன் கொண்டாடி தீர்த்தனர். அதோடு இரவு நேரத்தில் ஆண்கள் எல்லாம் குடித்துவிட்டு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். பின்னர் அனைவரும் வீட்டில் தூங்க சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் மாப்பிள்ளையின் மூத்த சகோதரர் ஷிவ் வீர், அந்த வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து அனைவரையும் தாக்கியுள்ளார்.

முதலில் மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்த புதுமண தம்பதியை கோடாரியால் கொடூரமாக வெட்டி கொன்றுள்ளார். தொடர்ந்து கீழே வந்த அவர் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு இளைய சகோதரர் அபிஷேக், மைத்துனர் ராமகிருஷ்ணா ஆகியோரைக் கொன்றார். இப்படியே மணமகனின் நண்பன், ஷிவ் வீரன் மனைவி, அத்தை என அனைவரையும் கொலை வெறியுடன் தாக்கினார். இதில் அவர்கள் அனைவரும் அலறவே, அக்கம்பக்கத்தினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் வருவதை அறிந்த ஷிவ் வீர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து உயிரிழந்த மணமக்கள் உட்பட 5 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திருமணத்துக்கு முன்பே பண கஷ்டத்தில் இருந்து வந்த ஷிவ் வீர், உறவினர்கள் குடும்பத்திடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், ஆனால் அவர்கள் தராததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் போலிசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் இதுதான் காரணமா அல்லது வேறெதுவும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான மறுநாளே புதுமண தம்பதி உட்பட 5 பேரை மாப்பிள்ளையின் சகோதரனே கொலை செய்துள்ளது உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. அடுத்தடுத்து தடம்புரண்ட 12 பெட்டிகள் !