India

8-வது மாடியில் இருந்து இரட்டை குழந்தைகளை தூக்கி வீசிய தாய்.. தானும் தற்கொலை செய்துகொண்ட சோகம்.. பின்னணி ?

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்ற 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. முடி திருத்தும் தொழில் செய்து வரும் இவர், திருமணமாகும் முன்னே சௌந்தர்யா குடும்பத்தாரிடம் இருந்து வரதட்சணை வாங்கியுள்ளார்.

இந்த சூழலில் இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் நித்யா - நிதர்ஸ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. இருப்பினும், கணேஷின் மனம் மாறாமல் தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளார். எனவே சௌந்தர்யா தனது இரட்டை குழந்தைகளோடு தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். கணவர் தன்னை கொடுமை செய்து வருவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் சௌந்தர்யா.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தாய் வீட்டில் வசித்து தங்கியிருந்த சௌந்தர்யா, தற்கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி 8-வது மாடியில் இருந்த அவர், தனது இரட்டை கை குழந்தைகளையும் மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு, தானும் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தைகள் உட்பட 3 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரது கணவர் கணேஷை கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரதட்சணை கொடுமை காரணமாக 8-வது மாடியில் இருந்து தனது இரட்டை குழந்தைகளை தூக்கி வீசிவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: ஒரே பகுதியில் 2-வது முறை.. 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. பொதுமக்கள் ஆவேசம் !