India

திடீரென வரதட்சணை அதிகம் கேட்டதால் ஆத்திரம்.. மணமகனை மணக்கோலத்தில் மரத்தில் கட்டிவைத்த பெண் வீட்டார் !

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் என்ற பகுதியை சேர்ந்தவர் அமர்ஜித் வர்மா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரோடு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமர்ஜித் வர்மா திருமணம் நடைபெற்றுள்ளது.

அப்போது நடந்த சடங்கின்போது மணமகனின் உறவினர்களும், மணமகள் உறவினர்களுக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. வரதட்சணை தொடர்பாக இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் இரு வீட்டாரிடையே பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது இது குறித்து இரு வீட்டாரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், வரதட்சணை அதிகமாக தரவேண்டும் என மணமகன் தரப்பில் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டுள்ளது. மேலும் மணமகனும் வரதட்சணை அதிகமாக வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், மணமகனை பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்தனர். இது தொடர்பான தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து மணமகனை விடுவித்தனர். தொடர்ந்து இருவீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இறுதிவரை சமரசம் ஏற்படவில்லை என கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.